நத்தம் : நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது மலைக்கிணறு சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு கந்த சஷ்டி சூரசம்ஹாரம், தைப்பூசம் உள்ளிட்ட விழாக்களில் திரளான பக்தர்கள் பங்கேற்பர்.திருமண நிகழ்ச்சிகள் இங்கு அதிக அளவில் நடைபெறும். கோவிலைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகள் நடைபெறும். சாதாரண நாட்களில்கூட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சுற்றுலா போல் வந்து செல்வர். இங்குள்ள கிரிவல பாதையில் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிவரை பலவண்ண கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது. தெற்குப் பகுதியில் இருந்து சுற்றுப்பாதை முடியும் வரை பாறாங்கற்களுடன் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் விேஷச நாட்களில் கிரிவலப் பாதையில் நடக்கும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். பெண்கள் கழிப்பறையில் தண்ணீர் வசதியில்லை. ஆண்களுக்கு கழிப்பறை வசதியே இல்லை. விழா நாட்களில் வாகனங்கள் நிறுத்த இடம் பற்றாக்குறை உள்ளது. இதனால் நெரிசலை தவிர்க்க முடியவில்லை. கிரிவலப்பாதையை சீரமைப்பது, கழிப்பறை வசதியை மேம்படுத்துவது, குடிநீர் வசதியை விரிவுபடுத்துதல் அவசியம் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.வடமதுரைக்கு பஸ் தேவை கவிதா பக்தர் வடமதுரை: திருமலைக்கேணிக்கு பிற பகுதியிலிருந்து பஸ் போக்குவரத்து வசதியுள்ளது. வடமதுரை பகுதியிலிருந்து பஸ்வசதி ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். பஸ் இல்லாததால் முக்கிய விழா நாட்களில் இப்பகுதியினர் அதிகளவில் கலந்துகொள்ள முடியாமல் போகிறது. கழிப்பறையில் தண்ணீர் வசதி வேண்டும். பெண்கள் உடை மாற்றவும் அறை ஏற்படுத்த வேண்டும்.