பதிவு செய்த நாள்
24
நவ
2020
01:11
சபரிமலை: சபரிமலையில் முதல் வாரத்தில் ஒன்பதாயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொரோனா கட்டுப்பாடுகளால் ஆன்லைன் முன்பதிவு மூலம் மண்டல காலத்தில் வார நாட்களில் ஆயிரம், சனி,ஞாயிறு தினங்களில் இரண்டாயிரம் பக்தர்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
நவ.,16 முதல் பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள். நேற்று முன்தினத்துடன் முடிந்த ஒரு வாரத்தில் ஒன்பதாயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பிற நாட்கள் தவிர்த்து சனி, ஞாயிறு தினங்களில் சன்னிதானத்தின் முன்பு பக்தர்கள் கூட்டமாக அமர்ந்திருந்ததை காணமுடிந்தது. சனிக்கிழமை அதிகபட்சமாக 1959 பேர் தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக் கிழமையும் அதிக பக்தர்கள் சென்றிருந்தனர். இருப்பினும் பக்தர்கள் குறைவால் தினசரி வருமானம் கணிசமாக குறைந்துள்ளது. 2000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் குளறுபடிகள் இல்லாததால் கூடுதல் பக்தர்களை அனுமதிக்கலாம் என அதிகாரிகள் உணர்ந்துள்ளனர்.
தற்போது சபரிமலை முன்பதிவில் காத்திருப்பு பட்டியல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர் ரத்து செய்யும் பட்சத்தில் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர் சபரிமலை செல்ல முடியும். ஐகோர்ட்டில் தாக்கலான மனு மீது உத்தரவு வந்ததும் ஓரிரு நாளில் கூடுதல் ஒதுக்கீட்டுக்கான முன்பதிவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.