பதிவு செய்த நாள்
25
நவ
2020
03:11
மணலிபுதுநகர்; அய்யா கோவிலில், இலவச திருமண மண்டபம் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வெகு விமரிசையாக நடந்தது.சென்னை, மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பிரசித்திப் பெற்றது. இக்கோவிலில் மைய சன்னிதியில், அய்யா வைகுண்ட பரம்பொருள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.கோவில் உட்பிரகாரத்தில், தியான மண்டபம், பதிவலம், ராஜகோபுரம் என, பிரமாண்டமாய் காட்சியளிக்கும், அய்யா கோவிலில், 36 அடி உயர தேரும் உள்ளது.
இங்கு, ஆண்டின், 365 நாட்களும் அன்னதானம் வழங்கப்படும்.இந்நிலையில், பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பயன்பெறும் வகையில், அன்னதான மண்டப கட்டடத்தின் முதல் தளத்தில், பிரமாண்ட இலவச திருமண மண்டபம் கட்டும் பணி, நேற்று துவங்கியது. அடிக்கற்கள், அய்யாவின் திருபாதங்களில் வைத்து, விசஷே பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன.அடிக்கல் நாட்டு விழாவில், கோவில் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ., நாராயணன் உள்ளிட்டோர், மேள தாளங்கள் முழங்க பதியில் இருந்து, அடிக்கற்களை தலையில் சுமந்தவாறு, ஊர்வலமாக சென்றனர்.பின், அன்னதான மண்டப முதல் தளத்தில், இலவச திருமண மண்டபம் கட்டும் பணிக்கான, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போது, அய்யா உண்டு என்ற திருநாம உச்சரிப்புடன், அடிக்கல் இடப்பட்டது.பணிகள், விரைவில் முடிந்து திருமண மண்டபம் பயன்பாட்டிற்கு வரும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.