பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஏக தின லட்சார்ச்சனை விழா நடந்தது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் லட்சார்ச்சனை விழா நடப்பது வழக்கம். இதன்படி நேற்று காலை மூலவர் பரமஸ்சுவாமிக்கு அபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து காலை தொடங்கி இரவு வரை அர்ச்சகர்கள் லட்சார்ச்சனையை நடத்தினர். மாலை உற்சவர் சுந்தரராஜ பெருமாள் சர்வ அலங்காரத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பாலித்தார். இரவு சிறப்பு தீபாராதனைக்குப் பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதனையடுத்து கவுசிக ஏகாதசி விழாவையொட்டி அர்ச்சகர்கள் புராணம் வாசித்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.