திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு ஜீயர் சுவாமிகள் புஷ்பரத உலா நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு பிரம்மரத உற்சவத்தின் நிறைவு நாளான இன்று திகாலை 5:00 மணிக்கு பாண்டிய மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருள, 12 திருவாராதனம் கண்டருளி, ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் கைசிக புராணம் வாசித்தார். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் விநியோகிக்கப்பட்டு ஜீயர் சுவாமிகள் புஷ்ப ரதத்தில் எழுந்தருளினார். கொரோனா தடை காலம் என்பதால் வீதி உலா நடைபெறாமல், பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் விழாவில் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.