பதிவு செய்த நாள்
28
நவ
2020
11:11
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும், மலை வடிவில் ஜோதியாக காட்சி அளித்த தலமான, திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழாவில் முக்கிய விழாவில், நாளை, அருணாசலேஸ்வரர் கோவிலில், அதிகாலை, 4:00 மணிக்கு, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்கள், சிவபெருமான் ஒருவனே அதாவதுஏகன், அனேகன் என்பதை கூறும் வகையில், சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில், அனேகன், ஏகன் என்பதை கூறும் வகையில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் வண்ண மின் விளக்குகள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று காலை, மஹா தீபம் ஏற்றப்பட உள்ள மஹா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு 20 க்கும் மேற்பட்டவர்கள் சுமந்து சென்றவாறு, மலை உச்சிக்கு, கொண்டு சென்றனர். மேலும், மஹா தீபம் ஏற்றப்பயன்படுத்த உள்ள 1,000 மீட்டர் காடா துணியால் ஆன திரி, முதல் கட்டமாக, 500 கிலோ நெய், 10 கிலோ கற்பூரம், ஆகியவையும் மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால், இன்றும், நாளையும் வெளியூர் பக்தர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வெளியூர் பக்தர்கள், திருவண்ணாமலை நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வருபவர்களை கண்டறிந்து நகரின் எல்லையில் தடுக்க, 15 செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் மூன்று நாட்கள் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை, பக்தர்கள் மலை ஏற முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில், 2,110 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.