பதிவு செய்த நாள்
01
டிச
2020
03:12
சென்னை; திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரருக்கு நடந்த தைலாபிஷேகத்தை முன்னிட்டு, கவசம் இன்றி பக்தர்கள் தரிசிக்க, இன்று ஒரு நாள் மட்டுமே வாய்ப்பு உள்ளது.சென்னை, திருவொற்றியூரில் அமைந்துள்ளது வடிவுடையம்மன் சமேத, தியாகராஜ பெருமான் கோவில். சிவாலயங்களில் புராணப் புராதனப் பெருமைகள் கொண்ட தலங்களில் ஒன்றாக, இந்த ஆலயம் அமைந்துள்ளது.
இத்தலம், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்றது. கலியநாயனார் அவதாரத் தலமாக விளங்கும் இங்கு தான், சுந்தரர், சங்கிலிநாச்சியாரை மணம் முடித்தார்.பட்டினத்தார் பலமுறை வந்ததும், அவர் முக்தி அடைந்ததும் கூட இங்கு தான். பிரளயத்திற்கு பின் தோன்றி, முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால், இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என, அழைக்கப்படுகிறார். இறைவன், வாசுகி என்ற பாம்பிற்கு அருள்புரிய எழுந்தருளி, தன்னுள் அடக்கிக் கொண்டதால், படம்பக்க நாதர் எனவும் அழைக்கப்படுகிறார்.இறைவன், இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர்.ஆனால், வேறு எந்தத் தலத்துக்கும் இல்லாத சிறப்பு, திருவொற்றியூர் கோவிலுக்கு உண்டு. ஆண்டுதோறும், கார்த்திகை மாத பவுர்ணமி நாளில், ஆதிபூரீஸ்வரருக்கு புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம் விமரிசையாக நடைபெறும்.இதை முன்னிட்டு, ஆதிபுரீஸ்வரரை கவசங்கள் ஏதுமில்லாமல் தரிசிக்கலாம். அதன்படி, கடந்த மாதம், 29ம் தேதி மாலை கவசம் திறக்கப்பட்டு, தைலாபிஷேகம் நடந்தது.இரண்டாம் நாளான நேற்று காலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணிவரை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிறைவு நாளான இன்று இரவு, 8:00 மணிக்கு நடக்கும் அர்த்த ஜாம பூஜைக்கு பின், மீண்டும் கவசம் அணிவிக்கப்படும்.இதையடுத்து, அடுத்த ஓராண்டிற்கு கவசம் இன்றி சுவாமி தரிசனம் செய்ய முடியாது என்பதால், இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான, சிறப்பு ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் சித்ராதேவி செய்துள்ளார்.