பதிவு செய்த நாள்
02
டிச
2020
03:12
திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த, நாகதேவதை நடுகல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து, திருப்பத்துார் துாய நெஞ்சக்கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி நேற்று கூறியதாவது: திருப்பத்துார் அருகே, எலவம்பட்டியில், விவசாய நிலத்திலுள்ள ஒரு கல்லை, அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இதை ஆய்வு செய்ததில், கி.பி.16ம் நுாற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு கால, நாகதேவதை நடுகல் என தெரியவந்தது. மூன்றடி உயரமும், இரண்டடி அகலமும் கொண்ட இக்கல்லிலுள்ள நாகதேதை உருவம், காலில் இருந்து இடுப்பு வரை நாகமாகவும், இடுப்பிலிருந்து தலைப்பகுதி வரை பெண்ணாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. தலையில் கிரீடம் உள்ளது. கைகளால் வணங்கிய நிலையில் காணப்படும் நாகதேவதையின் இரு பக்கமும், படமெடுத்த கோலத்தில், இரு நாகப்பாம்புகள் உள்ளன. இக்கல்லுக்கு அருகில், நாக உருவம் பொறிக்கப்பட்ட கல் உள்ளது. இதன் மூலம், தமிழர் பண்பாட்டில், 500 ஆண்டுகளுக்கு முன்பே, நாக வழிபாடு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.