பதிவு செய்த நாள்
04
டிச
2020
01:12
உடுமலை: கனமழை காரணமாக திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தற்போது நிலை கொண்டுள்ள புரெவி புயல் காரணமாக, மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், நேற்றுமுன்தினம் இரவு முதல் தொடர்ந்து, கன மழை பெய்து வருகிறது. இதனால், திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில், வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கரையோரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை, நேற்று மாலை வெள்ளம் சூழ்ந்தது.சுற்றுப்பிரகாரத்திலுள்ள கன்னிமார் கோவில், மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளிலும், பல அடி உயரத்திற்கு மழை நீர் சூழ்ந்தது. பக்தர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, கோவில் நடை சார்த்தப்பட்டது. பிளாஸ்டிக் கவர்கள் கொண்டு, கோவில் உண்டியல்கள் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டன.