பதிவு செய்த நாள்
05
டிச
2020
06:12
சிதம்பரம்: புரெவி புயல் காரணமாக கொட்டி தீர்த்த, 34 செ.மீ., அதிகன மழையால், சிதம்பரம் நகரம் தண்ணீரில் தத்தளிக்கிறது.
உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில், 43 ஆண்டுகளுக்கு பின், 5 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில், வங்கக் கடலில் உருவான புரெவி புயலின் தாக்கத்தால், கடலுார் மாவட்டத்தில், மூன்று நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 8:30 மணி முதல், நேற்று காலை, 8:30 வரையில் சராசரியாக, 18 செ.மீ., மழை பதிவானது.
அதிகபட்சமாக சிதம்பரத்தில், 34 செ.மீ., மழை கொட்டியது.இதனால், சிதம்பரம் நகரமே வெள்ளக்காடாக மாறியது. நகர வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது; வயல்கள் தண்ணீர் சூழ்ந்து, குளமாக காட்சியளிக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவில், 48 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்குள்ள, சிவகங்கை குளம் நிரம்பியது. தண்ணீர் வடிய வழியின்றி, கோவிலுக்குள் புகுந்தது. நடராஜர் வீற்றிருக்கும் சித்ரசபையை சுற்றிலும், 5 அடி உயரத்திற்கும், கோவில் வளாகம் முழுதும் இடுப்பளவிற்கும் தண்ணீர் தேங்கியது.இதற்கு முன், 1977ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில், நடராஜர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. 43 ஆண்டுகளுக்கு பின், தண்ணீர் சூழ்ந்துள்ளதாக கோவில் தீட்சிதர்கள் கூறினர்.