பதிவு செய்த நாள்
15
டிச
2020
12:12
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கிலும், விடுமுறை மற்றும் பவுர்ணமி நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்களும் வருகின்றனர். அவர்களுக்கு, இலவச தரிசனம், 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் கட்டண தரிசனம் என நிர்ணயிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது, இலவச தரிசனம் மற்றும், 50 ரூபாய் கட்டண தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப் பட்டுள்ளது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் கட்டண தரிசனத்தில், சுவாமி தரிசனம் செய்யாத நிலை உருவாகி உள்ளது. கொரோனா ஊரடங்கால், சுவாமி தரிசனத்துக்கு கடந்த மார்ச் மாதம் முதல் அனுமதிக்கப்படாத நிலையில், கடந்த செப்., மாதம் முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் சன்னதிகளில் மட்டும், தரிசனம் செய்யலாம். உப சன்னதிகளில் தரிசனத்துக்கு அனுமதியில்லை. கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு, எந்த கூடுதல் வசதியும் செய்து தரப்படவில்லை, அமர்வு தரிசனமும் கிடையாது. இந்நிலையில், 20 ரூபாய் கட்டண தரிசனத்தை ரத்து செய்தது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.