பதிவு செய்த நாள்
15
டிச
2020
03:12
கரூர்: திருநெல்வேலியில் இருந்து, ஷீரடிக்கு சிறப்பு ரயில் வரும் ஜனவரி, 5ல் இயக்கப்படுகிறது. இந்திய ரயில்வே சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில், திருநெல்வேலியில் இருந்து, ஷீரடிக்கு சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி, 5ல் ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து, ரயில்வே துறை அதிகாரிகள் கூறியதாவது: திருநெல்வேலியில் இருந்து ஷீரடிக்கு சென்று விட்டு, திருநெல்வேலிக்கு திரும்பி வரும் வகையில், 5 இரவுகள், 6 பகல்கள் கொண்ட பேக்கேஜ் பயண திட்டமாகும். இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக, ஷீரடிக்கு சென்று, இதே வழியாக திருநெல்வேலிக்கு திரும்பி வரும். பயணிகள் அனைவரும், இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் அழைத்து செல்லப்படுவர். 900 பேர் செல்லக்கூடிய ரயிலில், கொரோனா வைரஸ் காரணமாக, 400 பேர் அழைத்து செல்லப்படுவர். இந்த பேக்கேஜ் பயண திட்டத்தில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. ஐந்து வயதுக்கு மேற்பட்ட, ஒரு நபர், 5,685 ரூபாய் கட்ட வேண்டும். இந்த கட்டணத்தில் பயண வேளைகளில் வழங்கப்படும் சைவ உணவுகள், ஷீரடியில் தங்கும் கட்டணம் அடங்கும். திருநெல்வேலி தவிர்த்து பிற இடங்களில், ரயில்களில் ஏறினால் துாரத்துக்கு ஏற்ப கட்டணம் குறைக்கப்படும். விபரங்களுக்கு, 90031–40680, 82879–31964 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.