பதிவு செய்த நாள்
16
டிச
2020
07:12
மகம் : இந்த மாதத்தில் ராசிநாதன் சூரியனின் சாதகமான சஞ்சாரமும், நட்சத்திர அதிபதி கேதுவின் உச்ச பலமும் துணையிருப்பதால் எடுத்த காரியத்தை எளிதாக சாதிப்பீர்கள். எந்த ஒரு செயலையும் மிகுந்த விருப்பத்தோடு செய்வீர்கள். மனம் ஒன்றிச் செய்வதால் எடுத்த காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி எளிதாகக் கிட்டும். படபடவென்று காரியமாற்றும் நீங்கள் அடுத்தவர்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வீர்கள். டிச. 30 முதல் புதனின் இடமாற்றத்தால் குடும்பத்தில் உங்கள் எண்ணத்திற்கு மாற்றுக் கருத்து தோன்றலாம். கடன்பிரச்னைகளை சமாளிப்பதில் சேமிப்பு கரையும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும். உடன்பிறந்தாரோடு வீண் மனஸ்தாபம் கொள்வீர்கள். நெருங்கிய உறவினர் ஒருவருக்கு உதவி செய்யப்போய் தேவையற்ற சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மனதில் தோன்றுவதை யோசிக்காமல் உடனுக்குடன் செய்து முடித்துவிட வேண்டும் என்று அவசரப்படுவதால் ஒரு சில இழப்புகளை சந்திக்க நேரிடும். வண்டி வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் உயர்வடையும். பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக நாட்டம் உண்டாகும். உடல்நிலையில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். வீண் விவாதத்தின் காரணமாக தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பணிக்குச் செல்வோர் அலுவலகத்தில் புதிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் மொழிப்பாடங்களில் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.
பரிகாரம் : விஷ்ணுதுர்கையை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டமம் : டிச. 21, 22
பூரம் : ராசிநாதன் சூரியனின் அமர்வு நிலையும் நட்சத்திர அதிபதி சுக்ரனின் அமர்வு நிலையும் இந்த மாதத்தில் உங்களுக்கு சாதகமான பலன்களை உண்டாக்கித் தரும். எந்த ஒரு விஷயத்தையும் மேலோட்டமாகச் செய்யாமல் அலசி ஆராய்ந்து செய்வீர்கள். அலைந்து திரிந்து காரியங்களை சாதிக்க வேண்டி இருக்கும். சுயநல எண்ணங்கள் குறைந்து பொதுநலன் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். ராசிநாதன் சூரியன் குருவின் வீட்டில் வாசம் செய்வதால் முன்கோபம் கட்டுக்குள் இருக்கும். பிரச்னையான நேரத்தில் கவனமாகப் பேசி வெற்றி காண்பீர்கள். பொருள் வரவு நன்றாகவே இருந்தாலும் வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் தொடர்ந்து மகிழ்ச்சி நிலவும். சகோதரர்களால் லேசான மன வருத்தத்திற்கு ஆளாக நேரிடும். முன்பின் தெரியான புதிய நபர்களுடன் கவனத்துடன் பழகுவது நல்லது. டிச. இறுதி வாரத்தில் உண்டாகும் திடீர் பிரயாணங்களில் ஆதாயத்தினைக் காண்பீர்கள். பிள்ளைகளின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றம் அடையும். அநாவசியமான கற்பனைகள் மனதினில் இனம் புரியாத பயத்தினைத் தோற்றுவிக்கும். நீங்கள் செய்து வரும் செயல்களால் போட்டியும், பொறாமையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் உதவியை நாடி வரும் சூழ்நிலை உருவாகும். உடல்நிலையில் மூட்டு வலி, முதுகுவலி, தசைப்பிடிப்பு போன்ற தொந்தரவுகள் தோன்றும். வேலை செய்து கொண்டிருக்கும்போது உண்டாகும் வெட்டுக் காயங்களை உடனுக்குடன் கவனித்துக்கொள்வது நல்லது. உடன்பணிபுரிவோரின் ஆதரவினால் மேலதிகாரியிடம் நற்பெயர் அடைவீர்கள். வியாபாரிகள், கலைத்துறையினர் கடுமையான அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபத்தில் லேசான குறைவு உண்டாகும். தர்ம ஸ்தாபனங்களுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். நன்மையைத் தரும் மாதம் இது.
பரிகாரம் : அன்னபூரணி அன்னையை வழிபட்டு வாருங்கள்.
சந்திராஷ்டமம் : டிச. 22, 23
உத்திரம் 1ம் பாதம் : ராசிநாதனும், நட்சத்திர நாதனும் ஆகிய சூரியனின் சாதகமான அமர்வு நிலை சிந்தனையில் வேகத்தைத் தரும். குருவின் ஆறாம் இடத்து அமர்வு நிதி நிலையில் சாதகமான பலனைத் தராது என்றாலும் இந்த மாதத்தில் நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி ஓரளவிற்கு வெற்றியைப் பெற்றுத் தரும். கடன்பிரச்னைகளை முடிவிற்குக் கொண்டு வருவதில் கவனம் செலுத்துவீர்கள். சூரியனின் வலுவினால் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு ஸ்திரத்தன்மையைக் காண்பீர்கள். தான்பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடித்து காரியத்தினை சாதித்துக் கொள்வீர்கள். வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவீர்கள். வேண்டுமென்றே சிலர் உங்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். நீங்கள் மிகவும் நம்பிய ஒரு நபர் உங்களுக்கு துரோகம் இழைப்பதாக எண்ணி மனம் வருந்துவீர்கள். குடும்பத்தில் லேசான சலசலப்பு இருந்து வரும். பொருளாதார நிலையிலும் சுணக்கத்தினைக் காண நேரிடும். நீங்கள் எதிர்பார்த்த வகைகளில் தன லாபம் குறைவாக இருக்கும். ஆயினும் வரவுக்கு மிஞ்சிய ஆடம்பர செலவுகள் வரிசையில் காத்து நிற்கும். சகோதரர்களால் விரயத்தினைக் காண நேரிடும். பிள்ளைகளின் செயல்கள் பெருமையை தேடித் தரும். இதய நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத்துணையின் செயல்கள் உங்களுக்கு லேசான மனவருத்தத்தைத் தரலாம்.. மன நிம்மதியைத் தேடி ஆலயங்களை நாடிச் செல்வீர்கள். ஆன்மீகப் பயணத்திற்கான வாய்ப்பும் உள்ளது. கலைத்துறையினர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை அடுத்தவர்களுக்கு தாரை வார்ப்பர். தொழில் ரீதியாக கடும் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். ஆயினும் உழைப்பிற்கேற்ற ஊதியம் நிச்சயமாக இருந்து வரும். சரிசம பலன்களைத் தரும் மாதம் இது.
பரிகாரம் : ஞாயிறு தோறும் சரபேஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.
சந்திராஷ்டமம் : டிச. 23