பதிவு செய்த நாள்
19
டிச
2020
12:12
திருவள்ளூர் : திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், வரும், 29ம் தேதி, ஆருத்ரா அபிஷேகத்திற்கு, மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்து உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சிவபெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்து சபைகளில் முதலாவதான, ரத்தின சபை என்றழைக்கப்படும், திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலில், மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தன்று, ஆருத்ரா அபிஷேகம், இரவு முழுதும் நடைபெறும். தற்போது, கோவிட் - -19 பெருந்தொற்று பரவல் காரணமாக, வரும், 29ம் தேதி, காலை, 6:00 மணி முதல் பகல், 2:00 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.மாலை, 5:00 மணி முதல், இரவு, 9.00 மணி வரை, உற்சவர் நடராஜ பெருமானுக்கு, தெற்கு பக்கத்தில் பழைய ஆருத்ரா மண்டபத்தில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வெள்ளை சாத்துபடி போன்ற நிகழ்வில், பக்தர்கள், உபயதாரர்களுக்கு அனுமதிஇல்லை. அபிஷேக நிகழ்ச்சி, பொதிகை தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் காணும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்படும்.அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.மறுநாள், 30ம் தேதி, பக்தர்கள் தரிசனம் செய்ய, காலை, 6:00 மணி முதல், இரவு, 8.00 மணி வரை அனுமதிக்கப்படுவர்.காலை, சுவாமி பழையனுார் சென்று திரும்புதல், அனுகிரக தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.