பதிவு செய்த நாள்
19
டிச
2020
02:12
நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும், லாரி டிரைவர்களின் காவல்தெய்வம், கருப்பராயர், மகா காளியம்மன் சுவாமி ஆகும். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வழியாக, தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள், ஊட்டிக்கு பொருட்களை ஏற்றிச் செல்கின்றன. லாரி டிரைவர்களில் பெரும்பாலானவர்கள், வழி ஓரங்களில் உள்ள தெய்வங்களை, வழிபட்டு வாகனங்களை ஓட்டிச் செல்வது வழக்கம். தாங்கள் ஓட்டிச் செல்லும் வாகனம் எவ்வித விபத்தும் ஏற்படாமல் இருக்க வேண்டும், என வழிபடுவர். இது மாதிரியான நிகழ்வுகள் இன்றைய காலத்தில் நடைபெறுகின்றன.
ஆனால் ஊட்டிக்கு சரியான ரோடு வசதி இல்லாத காலத்தில், அங்குள்ள மக்களுக்கு, மளிகைப் பொருட்களையும், உணவு பொருட்களையும் மாட்டு வண்டிகளில் ஏற்றிச் சென்றுள்ளனர். இதற்காக வெளியூர்களில் இருந்து, மாட்டு வண்டிகளை ஓட்டி வருபவர்கள், கோவில்கள் உள்ள இடங்களில் தங்கி, சுவாமியை வழிபட்டு சென்றுள்ளனர். அந்த வகையில் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில், பிளாக் தண்டர் அருகே, சாலையின் ஓரத்தில் கருப்பராயர், கன்னிமார், மகாகாளியம்மன், முனியப்பன் ஆகிய நான்கு காவல் தெய்வங்கள் உள்ளன. இந்த கோவில் முன்பு, லாரி டிரைவர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து இக்கோவில் பூசாரி வெள்ளிங்கிரி கூறியதாவது: ஊட்டி சாலையில் உள்ள கன்னிமார், கருப்பராயர் கோவில், 200 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. எனது தாத்தாக்கள், அப்பா, சித்தப்பா, பெரியப்பா, எனது சகோதரர்கள் ஆகியோர், தலைமுறை தலை முறையாக பூஜை செய்து வருகிறோம். எனது தாத்தா அடிக்கடி கூறும் தகவல், நீலகிரி மாவட்டத்துக்கு மாட்டு வண்டிகளில் உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்பவர்கள், இரவில் கோவிலில் தங்கி விடுவர். காலையில் எழுந்து சுவாமியை வழிபட்டு, ஊட்டிக்கு செல்வர். வழியில் சாலையில் அமைந்துள்ள தெய்வங்கள் என்பதால் இதை காவல் தெய்வங்கள் என கூறி வருகின்றனர். கல்லாறு பகுதியில் உள்ள விவசாயிகள், இந்த சுவாமிகளை, தங்கள் விளை நிலங்களின், காவல் தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர். மேலும், விவசாயிகள், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, கோவிலில் பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபடுகின்றனர். இக்கோவிலில், ஆடி 18 பெருக்கு அன்று கன்னிமார் பூஜையும், விழாவும் நடைபெறும். இவ்வாறு பூசாரி வெள்ளியங்கிரி கூறினார்.