மதுரை : மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் மைதானத்தில் அரசு தோட்டக்கலைத்துறை ஸ்டால் அமைக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முயன்றனர்.
இக்கோயில் எதிரே மைதானம் உள்ளது. முன்பு பொது மந்தையாக இருந்து கோயில் நிர்வாகத்தின் கீழ் வந்தது. இங்கு 3000 சதுரடியில் தோட்டக்கலைத்துறை சார்பில் தற்காலிக ஸ்டால் அமைக்கும் பணி நடந்தது. சிலர் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முயன்றனர்.போலீசார் சமரசம் செய்தனர்.கோயில் நிர்வாகம் தரப்பில், மைதானம் 1983 முதல் கோயில் நிர்வாகம் கீழ் உள்ளது. இதுகுறித்த வழக்கின் தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. பொது மந்தையாகதான் இருக்க வேண்டும் என சிலர் வழக்கு தொடர்ந்தனர்.அவர்கள் யாரும் தோட்டக்கலைத்துறை ஸ்டால் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதற்கு முன் மைதானத்தில் வாகனங்கள் நிறுத்த டெண்டர் விட்டபோதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் தற்போது எதிர்க்க காரணம் மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்ய தான். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டது.