பதிவு செய்த நாள்
20
டிச
2020
09:12
காரைக்கால்: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் உள்ள, தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவிலில், இரண்டரை ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும், சனிப் பெயர்ச்சி விழா பிரசித்தி பெற்றது. வரும், 27ம் தேதி சனிப் பெயர்ச்சியை ஒட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.
தற்போது, கொரோனா தொற்று காரணமாக, கோவில் நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதையொட்டி, பக்தர்கள், சனிப்பெயர்ச்சி நாளில் மட்டுமன்றி, தொடர்ந்து, 48 நாட்களுக்கு, சனீஸ்வரரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களான, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், இலவச, சிறப்பு மற்றும் விரைவு தரிசனங்களுக்கு, https://thirunallarutemple.org/sanipayarchi என்ற, தேவஸ்தான இணையதளத்தில், ஆன் லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் மட்டும், உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள், நளன் குளத்து விநாயகரை தரிசித்த பின், தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வரர், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தனர்.