பதிவு செய்த நாள்
21
டிச
2020
12:12
புதுடில்லி:சீக்கிய மத குரு, குரு தேஜ் பகதுாரின் நினைவு தினத்தையொட்டி, டில்லியில் உள்ள ரகாப் கஞ்ச் குருத்வாராவில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார். மத்திய அரசின், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லைப் பகுதியில், கடந்த சில வாரங்களாக, விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பெரும்பாலானோர், பஞ்சாபை சேர்ந்த சீக்கியர்கள்.
திடீர் வருகை: இதற்கிடையே, சீக்கிய மதத்தின் ஒன்பதாவது மத குருவான, குரு தேஜ் பகதுாரின் நினைவு தினம், நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. டில்லியில் உள்ள, ரகாப் கஞ்ச் குருத்வாராவில், குருதேஜ் பகதுாரின் உடல், 1675ல் தகனம் செய்யப்பட்டது.எனவே, இந்த குருத்வாராவில், அன்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இந்நிலையில், அந்த குருத்வாராவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காலை வருகை தந்தார். குருத்வாராவில், பிரதமர் மோடி, சீக்கிய முறைப்படி சிறப்பு வழிபாடு நடத்தினார். பிரதமரின் இந்த திடீர் வருகையால், குருத்வாராவில், பாதுகாப்புக்காக போலீஸ் குவிக்கப்படவில்லை. பக்தர்களை கட்டுப்படுத்த எந்தத் தடைகளும் விதிக்கப்படவில்லை.
நானும் ஒருவன்: இதுகுறித்து, பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது:இன்று காலை, குரு தேஜ் பகதுார் உடல் தகனம் செய்யப்பட்ட, வரலாற்று சிறப்புமிக்க ரகாப் கஞ்ச் குருத்வாராவில், வழிபாடு செய்தேன்.நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். குரு தேஜ் பகதுாரின் கருணையால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களில், நானும் ஒருவன்.இவ்வாறு, அதில் குறிப்பிட்டுள்ளார்.