பதிவு செய்த நாள்
21
டிச
2020
12:12
திருவனந்தபுரம் : கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே, சபரிமலையில், ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என, திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரி மலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக, கடந்த மாதம், 15ல் நடை திறக்கப்பட்டது. கோவிலில், மண்டல பூஜை, வரும், 26ம் தேதி நடக்கிறது. அதன் பின் கோவில் நடை சாத்தப்பட்டு, மகர விளக்கு பூஜைக்காக, 31ம் தேதி, நடை மீண்டும் திறக்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக, தினமும், 1,000 பக்தர்கள் மட்டுமே, சபரிமலையில், ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கையை, 5,000 ஆக உயர்த்த, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கோவிலை நிர்வகிக்கும், திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு கூறியதாவது: சபரிமலையில், வரும், 26ம் தேதி முதல், ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களிடம், கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருக்க வேணடும். அதுவும், தரிசன நேரத்துக்கு முன், 48 மணி நேரத்துக்குள் சோதனை செய்யப்பட்டு, கொரோனா இல்லை என்ற சான்று பெற்றவர்கள் மட்டுமே, ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.