பதிவு செய்த நாள்
27
டிச
2020
11:12
நல்வாழ்விற்கான நெறிமுறைகளை ஹிந்து மதம் போதிக்கிறது. வெறும் சடங்கு, மூடநம்பிக்கைக்கு இதில் இடம் இல்லை. மனதில் உள்ள கீழான குணங்களைப் போக்கி அன்பு, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, மன்னிக்கும் குணம், மனித நேயம் போன்றவற்றை உருவாக்குவதில் விரதங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. விரதம் மூலம் புலன்கள் கட்டுக்குள் வரும். இடைவிடாமல் பணிபுரியும் உடல் உறுப்புகள் ஓய்வு பெறும். 15 நாட்களுக்கு ஒருமுறை உடலுக்கு குறிப்பாக வயிற்றுக்கு ஓய்வு தர வேண்டும் என்கிறது அறிவியில். பசியை நாம் உணரும் போது தான் பசியால் வாடும் மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்படும். இந்த நற்பண்பை உருவாக்கும் விரதங்களில் முதலிடம் வகிப்பது வைகுண்ட ஏகாதசி.
ஏகாதசி என்பது எண் 11 ஐக் குறிக்கும். தத்துவ ரீதியாக அறிவுடன் செயல்படும் ஐந்து ஞான இந்திரியங்கள், அறிவின் துணையின்றி செயல்படும் ஐந்து கர்மேந்திரியங்கள், மனம் ஆகிய பதினொன்றையும் ஒழுங்குபடுத்துவது ஏகாதசி விரதம். அரக்கனான முரன் என்பவன் தேவர்கள், மக்களுக்கு துன்பங்களை ஏற்படுத்தினான். அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்கிய மகாவிஷ்ணு அசுரனிடம் நீண்டநாள் போரிட்டார். சற்று ஓய்வெடுக்க விரும்பி ஒரு குகையில் படுத்திருந்தார். ஒருநாள் அவரை அசுரன் சீண்டவே, திருமாலின் உடம்பில் இருந்து ஒரு பெண் தோன்றினாள். கண் விழித்த திருமால் அசுரனைக் கொன்ற அவளுக்கு ‘ஏகாதசி’ என பெயரிட்டதோடு அவளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
மார்கழி வளர்பிறை ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது. இதற்கு முதல் நாள் இரவில் உணவு சாப்பிடாமல் விரதத்தை தொடங்க வேண்டும். ஏகாதசியன்று நாள் முழுவதும் விரதம் தொடர வேண்டும். துவாதசியன்று காலையில் நீராடி மகாவிஷ்ணுவை வழிபட்டு விரதம் முடிக்க வேண்டும். விரதத்தை முடித்த பின்னர் உணவில் நெல்லிக்காய், அகத்திக்கீரை, தயிரை சேர்ப்பர். இதனால் வயிற்றுப்புண் வராமல் தடுக்கும்.
பெருமாள் கோயில்களில் வடக்குத்திசை வாசலை சொர்க்கவாசல் என்பர். மது, கைடபர் என்னும் அசுரர்களுக்கு பெருமாள் மன்னிப்பு அளித்ததோடு, இந்த வாசல் வழியாக சொர்க்கம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து, ராப்பத்து உற்ஸவங்கள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பாக நடக்கும். அப்போது நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை அபிநயத்துடன் பாடி ஆடுவர். எனவே இந்த நாளில் பெருமாளை வழிபட்டு சொர்க்கவாசல் வழியாகச் சென்றால் நமக்கும் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.
ஏகாதசியன்று விரதமிருந்து உடல், மனம், ஆன்ம நலத்துடன் வாழ பரம்பொருளான நாராயணன் அருள்புரியட்டும்.