ஆங்கில புத்தாண்டு: சுவாமிமலை முருகன் கோவிலில் திருப்படி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2021 03:01
தஞ்சாவூர்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோவிலில் திருப்படி பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் நான்காவது படைவீடாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இத்தலத்தில் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை தந்தைக்கே உபதேசம் செய்வித்ததால் குரு உபதேச தலம் என்ற புகழுடையது. இக்கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திரளான பக்தர்கள் அதிகாலையிலேயே புனித நீராடி கோவிலுக்கு வருகை தந்து நீண்டவரிசையில் நின்று வழிபட்டனர். பின்னர், மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரமும், வைரவேல், வைரகீரிடமும் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து மகாதீபாரதனை, சிறப்பு வழிபாடு நடந்தது. சன்னதி முன்பு ஆண்களும், பெண்களும் நெய்விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வழிபட்டனர். புத்தாண்டை முன்னிட்டு, கோவிலில் உள்ள 60 தமிழ் வருட தேவதைகளின் பெயரில் அமைந்துள்ள 60 திருப்படிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அறுபது குத்துவிளக்குகள் வைத்து பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.