பதிவு செய்த நாள்
02
ஜன
2021
01:01
மேட்டுப்பாளையம்: குன்னூர், கோத்தகிரியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், பழனி கோவிலுக்கு, பாதயாத்திரையாக நடைபயணம் மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரியை சேர்ந்த முருக பக்தர்கள், ஒவ்வொரு ஆண்டும் பழனிக்கு நடை பயணமாக சென்று, முருகனை வழிபட்டு வருவது வழக்கமாகும். இந்த ஆண்டு நேற்று காலை குன்னூரில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், பழனிக்கு, பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர். இவர்கள் மேட்டுப்பாளையம், அன்னூர், அவிநாசி, திருப்பூர், தாராபுரம் வழியாக, பழனிக்கு நான்காம் தேதி சென்றடைய உள்ளனர்.
இரவில் இவர்கள் சாலைகளில் நடந்து செல்லும் போது, வாகனங்களுக்கு நடந்து செல்பவர்கள், தெரியும் வகையில், ரிப்லக்டர் ஜாக்கெட் அணிந்தும், கைத்தடியில் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். இதனால் வாகன வெளிச்சத்தில், இவர்கள் நடந்து செல்வது நன்றாக தெரிவதால், வாகனங்களை ஓரமாக ஓட்டிச் செல்கின்றனர். ஜனவரி மாதம் முழுவதும், முருக பக்தர்கள் பாதயாத்திரையாக, பழனிக்கு நடை பயணம் மேற்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.