வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் வளாகத்தில் நிழற்கூரை அமைக்கும் பணி 5 ஆண்டுகள் கடந்தும் நிறைவடையாமல் கிடப்பில் உள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 13 நாட்கள் நடக்கும் திருவிழாவிற்காக கோயில் வளாகத்தில் தற்காலிக நிழற்கூரை அமைக்கப்படும். இங்கு பெருமாள், சவுந்தரவல்லி தாயார் சன்னதிகளின் முகப்பு பகுதியில் 5000 சதுர அடிக்கு நிரந்தரமாக இரும்பு கட்டமைப்பிலான கூடாரத்தை அமைத்து, குளிர்ச்சி தரும் நிழற்கூரையை அமைக்க உள்ளூர் பிரமுகர்கள் முயற்சியை துவக்கினர்.ஊர்மக்கள் பங்களிப்புடன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நிழற்கூரை பணி 2015ல் துவங்கியது.
இதற்கான இரும்பு துாண்கள் நிறுவப்பட்டு, தளவாடப் பொருட்கள் தயாரித்து கோயிலுக்குள் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளாகியும் முறைப்படி நிர்வாக ஒப்புதல் கிடைக்காததால் பணி கிடப்பில் உள்ளது.விரைவில் நிர்வாக ஒப்புதல் அளித்து பணியை முடிக்க இந்துசமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.