பதிவு செய்த நாள்
05
ஜன
2021
01:01
திருவாரூர் : ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில், கிருஷ்ணாநந்த தீர்த்த மஹா சுவாமிகளின், ஜென்ம நட்சத்திர ஜெயந்தி விழா நேற்று நடந்தது.
திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி குரு தலம் அருகே, ஞானபுரீ சித்ரகூட ஷேத்ரம் சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் வித்யாபீடம் ஸ்ரீவித்யா அபிநவ கிருஷ்ணா நந்த தீர்த்த மஹா சுவாமிகளின், 54வது ஜென்ம நட்சத்திர ஜெயந்தி விழா நேற்று நடந்தது.சுவாமிகள் கோ பூஜை, கஜ பூஜை செய்தார். லட்சுமி நரசிம்மர், கோதண்டராமர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, மஹா தீபாராதனை செய்து வழிபட்டார். கிருஷ்ணாநந்த தீர்த்த மஹா சுவாமிகள் பீடத்தில் எழுந்தருள, 108 வைதீகர்களின் நான்கு வேதபாராயணம் நடந்தது.
பல கோவில்களின் பிரசாதங்கள் சுவாமிகளிடம் வழங்கப்பட்டன. மடத்தின் ஸ்ரீகாரியம் சந்திரமவுலீஸ்வரர், சுவாமிகளின் ஜென்ம நட்சத்திர விழா குறித்து எடுத்துரைத்தார். இதையடுத்து, பக்தர்களுக்கு சுவாமிகள் அருளாசி வழங்கினார்.கோவில் ஸ்தாபகர் ரமணி அண்ணா, அறங்காவலர்கள் வெங்கட்ராமன், ஜெகன்நாதன் மற்றும் பக்தர்கள் அருளாசி பெற்றனர். இங்கு வரும், 12ம் தேதி மார்கழி அமாவாசை மூல நட்சத்திரத்தில், அனுமன் ஜெயந்தி விழா நடக்க உள்ளது.