பதிவு செய்த நாள்
05
ஜன
2021
03:01
கோபி: பாரியூர் கோவில் குண்டம் விழாவுக்கு, உபயதாரர் ஒருவர், நான்கு டன் விறகு தந்துள்ளார்.
கோபி, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா, கடந்த டிச.,24ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாளை மறுதினம் (7ம் தேதி) குண்டம் விழா நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தீ மிதிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோவில் பூசாரிகள், சேவகர்கள் என, 300 பேருக்கு மட்டுமே, குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விழா முக்கிய நிகழ்வான, சந்தன காப்பு அலங்காரம் நேற்று காலை நடந்தது. மூலவர் அம்மனுக்கு, 2,000 பழங்கள், வாசனை திரவிய அபிஷேகம் நடந்தது. பின், இரண்டு கிலோ சந்தனத்தை கொண்டு, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் குண்டத்துக்கு தேவைப்படும் விறகுகளை, பக்தர்கள் அனுப்பி வருகின்றனர். கோபியை சேர்ந்த, ஒரு உபயதாரர், நான்கு டன் ஊஞ்சமர விறகு (எரிகரும்பு) தந்துள்ளார். சன்னதிக்கு எதிரே, 60 அடி நீள குண்டத்தின் அருகில் குவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.