பதிவு செய்த நாள்
05
ஜன
2021
03:01
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஆழ்வார் மோட்சத்துடன் நிறைவடைந்தது.
வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி விழா 20 நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும். இதில் முதல் பத்து நாட்கள் பகல் பத்து திருமொழித் திருநாள் என்றும் அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து திருவாய்மொழித் திருநாள் என்ற பெயரிலும் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பகல் பத்து உற்சவம் கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கியது. பகல் பத்து 10ம் நாளன்று ஸ்ரீ நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் சேவை சாதித்தார். முக்கிய நிகழச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 25-ம் தேதி அதிகாலை நடந்தது. அன்று இராப்பத்து உற்சவம் தொடங்கியது. 31ம் தேதி திருக்கைத்தல சேவை, ஜனவரி-1 ம் தேதி வேடுபறி உற்சவம் ஆகியவை சிறப்பு நிகழ்ச்சிகளாக நடந்தன. உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் (3ம் தேதி) காலை தீர்த்தபேரர் எனப்படும் செல்வர் கோயில் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார்.
கண்ணிநுண்சிறுத்தாம்பினால் நா கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன், என்னப்பனில் நண்ணித்
தென்குருகூர் நம்பியென்றகால் அண்ணிக்கும்
அமுதூறும் என் நாவுக்கே - என்று மதுரகவியாழ்வார் தனது குருவானவரும் ஆழ்வார்களில் முதன்மையானவருமான நம்மாழ்வாரைப் பற்றிப் பாடி அந்த குருவருளாளே திருவருளையும், ஆழ்வார்கள் வரிசையிலே இடத்தையும் பெற்றவர். அவ்வளவு பெருமைக்குரிய நம்மாழ்வார் திருமேனியை ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பாதங்களில் கிடத்தி அவரை வைகுண்டத்துக்கு அனுப்பும் வைபவம் நேற்று நிறைவு நிகழ்ச்சியாக ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்தது. அத்துடன் வைகுந்த ஏகாதசி விழா நிறைவடைந்தன.