பதிவு செய்த நாள்
06
ஜன
2021
04:01
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில், விஷமிகளால் இடிக்கப்பட்ட கிருஷ்ணர் கோவிலை, இரு வாரங்களில் மீண்டும் கட்டித் தரும்படி, அரசுக்கு, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம், கரக் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில், விஷமிகளால், சமீபத்தில் இடித்து தீ வைக்கப்பட்டது. அங்கிருந்த, ஸ்ரீ பரமஹம்சர் மகாராஜ் சமாதியும், இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக, 100 பேர் கைது செய்யப்பட்டனர். 350 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவில் இடிப்பு குறித்து அறிக்கையை, சுஹப் சுதில் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷன், நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, குல்சார் அகமது அளித்த தீர்ப்பு விபரம்:இடிக்கப்பட்ட கிருஷ்ணர் கோவிலையும், சேதப்படுத்தப்பட்ட சமாதியையும், கைபர் பக்துன்வா மாகாண அரசு, இரு வாரங்களில் சீரமைத்து, மீண்டும் கட்டித் தர வேண்டும். கட்டுமானச் செலவை, கோவிலை இடித்தவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.
கோவில் கட்டி முடிக்கப்பட்ட விபரத்தை, இரு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும். பாகிஸ்தானில், எத்தனை ஹிந்து கோவில்கள் உள்ளன என்பதையும், கோவில் நிலங்களில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் அவற்றை மீட்க எடுத்துள்ள நடவடிக்கைகளையும், அறிக்கையாக, வழங்க வேண்டும்.இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.