பதிவு செய்த நாள்
06
ஜன
2021
04:01
காஞ்சிபுரம் : அனுஷ்டான குள உற்சவத்தை முன்னிட்டு, வேடுவன் கோலத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ஆண்டுதோறும் ஜனவரி மாதம், செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள ராமானுஜர் கோவிலில் எழுந்தருளும், அனுஷ்டான குள உற்சவம் நடைபெறும்.இந்தாண்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக, அரசு உத்தரவுபடி, சுவாமி புறப்பாடு நிறுத்தப்பட்டது. அதனால், ராமானுஜர் கோவிலில், நேற்று நடைபெற இருந்த உற்சவம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலாக, வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உற்சவம் நடைபெற்றது. காலை, பெருமாள் கோவிலில் உள்ள ராமானுஜருக்கு, திருமஞ்சனம் நடைபெற்றது.பின், கண்ணாடி அறையில் எழுந்தருளிய வரதர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியருக்கு, சால கிணற்றில் இருந்து எடுத்து செல்லப்பட்ட நீரில், திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, வேடுவன் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.