தைப்பூசத்துக்கு விடுமுறை: அரசு அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2021 04:01
அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, முருகக்கடவுள் கையில் ஏந்திய நாளே தைப்பூச விழாவாக கொண்டாடப்படுகிறது.தை மாதத்தில் நிறைமதியன்று, பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக ஹிந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலை வழிபட்டால், தீய சக்திகள் அண்டாது என்பது ஐதீகம். தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை துவங்குகின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து, தைப்பூசத்தன்று முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு உகந்த நாளான தைப்பூசத்தில், பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக சென்று, ஆறுபடை வீடுகள் வீற்றிருக்கும் முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.உலகம் முழுவதும் உள்ள முருக பெருமான் ஆலயத்தில், கோலாகலமாக கொண்டாடப்படும் தைப்பூச திருநாளை, பொது விடுமுறை நாளாக அறிவித்த தமிழக முதல்வருக்கு, ஹிந்துக்கள் நன்றி தெரிவித்தனர்.