பதிவு செய்த நாள்
10
ஜன
2021
10:01
சபரிமலை: சபரிமலை வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், கொரோனா குறைந்த பின், மாதாந்திர நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க தந்திரியுடன் ஆலோசிக்கப்படும், என, தேவசம்போர்டு தலைவர் வாசு கூறினார்.
சபரிமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மண்டல - மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கிஉள்ளது. மண்டல காலத்தில் தேவசம்போர்டு ஊழியர்கள், போலீசார், பக்தர்கள் என, 423 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சபரிமலை நிர்வாக அதிகாரிக்கு கொரோனா உறுதியானது. இதனால், சபரிமலையை தடை செய்யப்பட்ட பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என, கேரள சுகாதார துறை கூறியது. ஆனால், சூழ்நிலையை தேவசம்போர்டு விளக்கி யதால் அது தவிர்க்கப் பட்டது.பொருளாதார நெருக்கடிதேவசம்போர்டின் வருமானம் சபரிமலையை நம்பியுள்ளது.
மார்ச் முதல் சபரிமலை வருமானம் நின்று விட்டதால், கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளது. மாநில அரசு, 70 கோடி ரூபாய் மானியம் தந்துள்ளது. சம்பளம் மற்றும் செலவினங்களுக்காக மாதம், 50 கோடி ரூபாய் வேண்டும்.மகர ஜோதி ஜன., 13ம் தேதி இரவு வரை வரும் பக்தர்கள், தரிசனத்துக்கு பின் திரும்பி விட வேண்டும். 14ம் தேதி வரும், 5,000 பக்தர்கள் மகர ஜோதி தரிசனம் நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவர். சீசனில் வரமுடியாமல் போன பக்தர்களுக்காகவும், வருமான இழப்பை சரிகட்டும் வகையிலும், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பின், மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை, ஐந்தில் இருந்து, 10 ஆக அதிகரிப்பது பற்றி பரிசீலனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, தந்திரியுடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.