பதிவு செய்த நாள்
12
ஜன
2021
08:01
நாமக்கல்: ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் ஒரு லட்சத்து 8 வடை மாலையில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு எண்ணைய், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், பால், தயிர் மற்றும் சந்தன அபிஷேகம் செய்யப்பட்டது. ஆஞ்சநேயர் அதிகாலை காவிபட்டு உடுத்தி ராஜ அலங்காரத்திலும், ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் அனுமதி : ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, உதவி ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அனுமதி இல்லை. சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள், காலை, 5:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை அனுமதிக்கப்படுவர். சுவாமி தரிசனத்திற்கு namakkalnarasimhaswamianjaneyartemple.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். காலை, 5:00 முதல், இரவு, 9:00 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 750 பேர் கட்டண வழி அல்லது இலவச தரிசன வழியில், அவரவர் விருப்பத்திகேற்ப முன்பதிவு செய்பவர்கள் அனுமதிக்கப்படுவர். டோக்கன் முறையில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 1,500 பேர் கட்டண வழி அல்லது இலவச தரிசன வழியில் அனுமதிக்கப்படுவர். ஆன்லைன் மூலம் பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழயதைகள் ஆகியோர் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குங்குமம், மஞ்சள், தீர்த்தம், பூ மற்றும் இதர பிரசாதங்கள் வழங்கப்படாது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.