மதுரை : மதுரை சொக்கிக்குளம் காஞ்சி காமகோடி பீடம் சார்பாகமஹா பெரியவரின் 27வது ஆராதனை மஹோத்ஸவம் மற்றும் அனுஷ வைபவம் நடந்தது.
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் குருமகிமை தலைப்பில் பேசியதாவது: மஹா பெரியவர் கடந்த நூற்றாண்டு நமக்களித்த ஒரு பெரும் அருட்கொடையாவார். ஸ்ரீ ராமானுஜர், வேதாந்த தேசிகர் வரிசையில் பூரணமாய் நூறு ஆண்டுகள் வாழ்ந்தவர். 13 வயதில் சன்யாசியான மஹா பெரியவர் 100 வயது வரைஅந்த சன்யாச தர்மத்தை அப்பழுக்கின்றி பின்பற்றியவர். மாற்று மதத்தவர்களாலும் நேசிக்கப்பட்ட சிறப்பு அவருக்கு உண்டு.இவர் நாட்டில் செல்லாத ஊர்களில்லை. இவரிடம் நம் குறைகளை கூறத்தேவையில்லை. இவர் பார்வை பட்டால் போதும். நம் குறைகள் தீர்ந்து விடும். அப்படி ஒரு தவ வலிமை கொண்டவர். இவரின் கருத்துக்கள் தெய்வத்தின் குரல் என்ற நூலாக கிடைக்கிறது. இதை வாசிப்பவர்களுக்கு வாழ்வில் குழப்பங்கள் ஏற்படாது, என்றார். மடத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன், துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சுந்தர், பொருளாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.