பதிவு செய்த நாள்
13
ஜன
2021
12:01
ஆமதாபாத்:குஜராத்தில், பிரசித்தி பெற்ற சோம்நாத் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில், கொரோனா பரவலை தடுக்க, சன்னதியில் விழுந்து கும்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஊரடங்கு பிறப்பித்து, 75 நாட்களுக்குப் பின், ஜூன் மாதம் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.எனினும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைப்படி, பக்தர்கள் வருகை மற்றும் வழிபாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சோம்நாத் கோவில் நிர்வாகி விஜய்சின் சவ்டா கூறியதாவது:கோவிலில், மூன்று வேளை ஆரத்தி காண்பிக்கப்படும் போது, பக்தர்களை அனுமதிப்பதில்லை. பிரார்த்தனையின் போது, 5 சதவீதம் பேர் வீதம், சன்னதியில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று, சிவ லிங்கத்தை தரிசிக்கின்றனர். மற்றபடி, மூலவர் சன்னதிக்கு முன் உள்ள கஜஸ்தம்பம் அருகே, முழு உடலும் தரையில் படும்படி, விழுந்து கும்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் இரு கை கூப்பி நமஸ்காரம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைப்படி, இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.