புதுச்சேரி : அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பஞ்சவடீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கு 2,500 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.
புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் 36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி பஞ்சமுக ஜெயமங்கள ஆஞ்ஜநேயருக்கு 2,500 லிட்டர் பால், சந்தனம், கான்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிேஷகம் செய்யப்பட்டது.யாகசாலையில் இருந்து மங்கள இசையுடன் கடம் புறப்படாகி ஆஞ்ஜநேயருக்கு கலச நீரால் அபிேஷகம் நடந்தது.
ராமர் பாதுகைக்கும் திருமஞ்சனம் நடந்தது. பின்னர், மூலவர் ஆஞ்ஜநேயருக்கு 1008 வடை மாலை, உற்சவருக்கு 108 வடைமாலை அணிவித்து விசேஷ அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.மாலையில், சீதா திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அனுமன் ஜெயந்தி விழாவிலும், திருக் கல்யாண உற்சவத்திலும் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.