பதிவு செய்த நாள்
14
ஜன
2021
11:01
மேல்மருவத்துார், ஆதிபராசக்தி சித்தர் பீட பங்காரு அடிகளார், பொங்கல் விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு வழங்கிய ஆசி உரை
பொங்கல் என்பது, இயற்கையை வணங்கும் விழா. நெல் அறுவடை செய்து, முதலில் சூரியனுக்குப் படைத்து வணங்கும் விழா.பொங்கல் திருநாளில் பூமிக்குப் பூஜைபோட்டு, அடுப்பை வைத்து, அருகம்புல் இட்டு நெருப்பேற்றி, புதிய மண்பானை வைத்து, பாலுாற்றி வணங்கிறோம்.பானை பெரிதேயானாலும், பால் சிறிதே ஊற்றினாலும், அது பொங்கி வருகிறது. அது பொங்கி வரும்போது, நம் உள்ளமும் மகிழ்ச்சியால் பொங்குகிறது.
பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல், மாட்டை வணங்குகிறோம். பசு, பால் கொடுக்கிறது. மாடு ஏர் ஓட்ட பயன்படுகிறது. பால் இல்லை எனில், மனிதன் வாழ்க்கை கிடையாது. குழந்தைகளின் வாழ்க்கையும் கிடையாது. பால் சார்ந்த வியாபாரமும் கிடையாது.இப்போது, அதிலும் விஞ்ஞானத்தை புகுத்தி பால் பவுடர் வந்துவிட்டது. எப்போது, விஞ்ஞானம் உள்ளே புகுந்ததோ, அப்போதே மெய்ஞானம் போய்விட்டது. தற்போது, மெய்ஞானம் திரும்ப வரத் துவங்குகிறது.தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும், அறிந்தும் அறியாமலும், நாம் கொண்டாடும் பொங்கல் பண்டிகை, உற்றார், உறவினர்களும், பொதுமக்களும், ஒற்றுமையாக இருக்க உதவுகிறது.
ஒரே தாய்! ஒரே குலம் என்பதுபோல, அனைவரும் ஒன்றுதான். இயற்கை தந்த தண்ணீர் ஒன்றுதான்; உணவு ஒன்றுதான். அதுபோல வாழ்த்துகளும் ஒன்றுதான், வணக்கங்களும் ஒன்றுதான். சென்ற காலம், பொற்காலம் என்று சொல்வது உண்டு.என்ன கெட்டது செய்தோமோ, பாவங்கள் செய்தோமோ, கொரோனா நோய் வந்துவிட்டது. முதல் கொரோனா என்பது மாரியம்மைதான். அடுத்து வந்த கொரோனா சின்னம்மை போன்றது.
உள்ளம் சுத்தமாக இருந்தால், கொரோனா போன்ற அழிவுகள் வராது. இது போன்ற நோய்களை தடுக்க, அந்த காலத்தில் வேப்பிலை கொண்டு, மஞ்சள் நீர் தெளித்தோம்.இப்போது அனைத்து உறவுகளையும், உயிரினங்களையும், இயற்கைதான் காப்பற்ற வேண்டும் என, ஓம் சக்தி! பராசக்தி கூறி வணங்குகிறோம். தாய் இன்றி பிள்ளை கிடையாது. தாயும் இயற்கைதான். பெற்ற தாயை வணங்க வேண்டும்.
அன்று, சித்தர்கள் கூறிய கருத்துகளைக் கேட்டோம். சித்தர்கள் கூறிய மருந்துகளைத்தான், இன்றும் பயன்படுத்துகிறோம்.அன்று, பஞ்சாங்கத்தை வைத்து வானிலையைக் கணித்தோம். இன்று அப்படி இல்லை. விஞ்ஞானத்தால் இன்று கணிக்கும் வானிலை பொய்க்கிறது. உள்ளத்தில் தெளிவும், பண்பும், அமைதியும், நிம்மதியும் எப்போதும் இருக்க வேண்டும். இந்த ஆண்டு, அமைதி கிடைக்க வேண்டும். ஒருவரை ஒருவர் மன்னித்து, ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல், வாழ வேண்டும். தொழில் வளர வேண்டும். பொங்கல் திருநாளில், அனைவரையும் வாழ்த்துக்கிறோம். வாசகர்களுக்கும், பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும், அன்பான பொங்கல் நல்வாழ்த்துகள். இவ்வாறு, பங்காரு அடிகளார் ஆசி வழங்கி உள்ளார்.