பதிவு செய்த நாள்
14
ஜன
2021
07:01
திருப்பூர் : திருப்பூர் வட்டாரத்தில் பள்ளிகள் மற்றும் பொது அமைப்புகளின் சார்பில், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருப்பூர், கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் சமூக இடைவெளியுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி தலைமை வகித்தார். முதல்வர் அனிதா, ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து பொங்கல் வைத்தனர். அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்க வேண்டுமென வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக்பள்ளியில், காப்பு கட்டில் தொடங்கி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்களிலும் நடக்கும் பொங்கல் திருவிழாவின் மகத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொண்டனர். முளைப்பாரி எடுத்து விநாயகரை வழிபட்டு, பாட்டுப்பாடி, கும்மியடித்து பொங்கல் வைத்தனர். கயிறு இழுத்தல், உறி அடித்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் என விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருப்பூர், பெருமாள் கோவில் வீதி அருகேயுள்ள ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் காலேஜில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நோய்த்தொற்று பரவலில் இருந்து அனைவரும் விடுபட்டு, 2021ம் ஆண்டு அனைவருக்கும் சிறந்த ஆண்டாக அமைய வேண்டி சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தாளாளர் கீதா, முதல்வர் தங்கராஜன் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்தியன் ரெட் கிராஸ் சொசடை்டியின், மாவட்ட கிளை சார்பில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், நேற்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தலைவர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார். செயலாளர் தாமரோதரன் வரவேற்றார். பொருளாளர் சுப்பிரமணியம், இணை செயலாளர் புரு ேஷாத்தமன் பங்கேற்றனர். திருப்பூர் நிப்ட் - டீ கல்லுாரியில், பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. வளாகத்தில் உள்ள வித்ய விநாயகருக்கு, சிறப்பு பூஜை நடந்தது. பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து, பொங்கல் வைத்தனர். மஞ்சள், கரும்பு, பொங்கலுடன், படையலிட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் சண்முகம், முதல்வர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டிரீம் -20 பசுமை அமைப்பு மற்றும் நெகிழி இல்லா திருப்பூர் அமைப்புகள் சார்பில், கொடிக்கம்பம் மெயின் ரோடு பகுதியில் உள்ள, சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் நேற்று, மரப்பொங்கல் விழா நடந்தது. சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. பசுமையை வளர்க்க வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொங்கல் வைத்து, மரக்கன்றுகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.