பதிவு செய்த நாள்
14
ஜன
2021
07:01
சபரிமலை: பொன்னம்பலமேட்டில் இன்று மாலை 6:30க்கு காட்சியளித்த மகரஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கேரள மாநிலம், சபரி மலை ஐய்யப்பன் கோவிலில், இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியது. இன்று மாலை, மகர விளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகளால், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.பந்தளம் அரண்மனையில் தான், அய்யப்பன் வளர்ந்தார். சபரிமலை சென்ற பின், அய்யப்பனைக் காண, பந்தளம் மன்னர் ஆபரணங்களுடன் சென்றார்.அதை நினைவு படுத்தும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும், பந்தளம் மன்னர் பிரதிநிதியுடன் திருவாபரணபவனி சபரிமலை வருவதாக வரலாறு கூறுகிறது. பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள், சாஸ்தா கோவிலுக்கு எடுத்து வரப்பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டதற்கு பின்னர் பவனி புறப்படுவதற்கான சடங்குகள் துவங்கின. சரண கோஷங்கள் முழங்க, திருவாபரண பவனி புறப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளால் போலீசார், தேவசம்போர்டு ஊழியர்கள் மட்டுமே பவனி வந்தனர். இந்த ஆண்டு பந்தளம் மன்னர் குடும்பத்தில் குழந்தை பிறந்துள்ளதால், ராஜ பிரதிநிதியாக யாரும் பவனியில் வரவில்லை.முக்கிய திருவாபரண பெட்டியை, குருசாமி கங்காதரன் சுமந்து வந்தார். மகரசங்கராந்தி தினமான இன்று மகாதீபாராதனை நடைபெற்றது. அதுமுடிந்ததும், மாலை 6.30 மணியளவில் பொன்னம்பல மேட்டில் மூன்று முறை மகர ஜோதி தெரிந்தது.ஜோதி வடிவமாக காட்சியளித்த ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 18ஆம் தேதி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறுகிறது. 19ஆம் தேதி வரை யில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். மகரவிளக்கு பூஜை முடிந்து 20ஆம்தேதி காலை 6.30மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. இத்துடன் இந்த ஆண்டிற்காக மண்டல பூஜை, மற்றும்மகர விளக்கு பூஜைக்காலம் முடிவடைகிறது.