பதிவு செய்த நாள்
15
ஜன
2021
05:01
பல்லடம்: பல்லடத்தில் நடந்த பட்டி பொங்கல் பூஜையின் போது பிறந்த கன்று குட்டிகளால், விவசாயின் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
பல்லடம் அடுத்த பனப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் குமார், 38; விவசாயி. மனைவி திலகவதி, 32. மோகன் குமாருக்கு சொந்தமாக, 5 காளைகள், மற்றும் 15 பசுமாடுகள் உள்ளன. விவசாயத்துடன் பால் உற்பத்தி தொழிலையும் செய்து வருகிறார். மாட்டு பொங்கல் பண்டிகையான நேற்று, மாடுகளை சுத்தம் செய்து, குடும்பத்துடன் பட்டி பொங்கல் பூஜை செய்தார். அதில், 6 வயதான பசுமாடு ஒன்று கர்ப்பமாக இருந்தது. பட்டி பொங்கல் பூஜை செய்யும்போது, பசுமாடு இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது.
மோகன் குமார் கூறுகையில், பட்டி பொங்கல் பூஜை செய்யும்போது மாடு கன்றுகளை ஈன்றதை சுப சகுனமாக பார்க்கிறோம். மேலும், மாட்டு பொங்கல் தினத்தில் பிறந்தது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல், கடந்த பவுர்ணமி அன்றும் பசுமாடு ஒன்று கன்று ஈன்றது. மேலும், மூன்று கன்றுகளும் காளைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாட்டு பொங்கல் நாளில் கன்றுகள் பிறந்தது குடும்பம் முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.