காஞ்சிபுரம் 16 கால் மண்டபத்தில் அம்பாளுடன் அருளிய ஏகாம்பரர்
பதிவு செய்த நாள்
18
ஜன 2021 06:01
காஞ்சிபுரம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், திம்மசமுத்திரம் பார்வேட்டை உற்சவம் ரத்து செய்யப்பட்டதால், ஏலவார்குழலி, அம்பிகையுடன், ஏகாம்பரநாதர், 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டு தோறும் காணும் பொங்கலன்று, திம்மசமுத்திரம் பார்வேட்டை உற்சவம் நடைபெறும்.உற்சவத்தின்போது, ஏலவார்குழலி அம்பிகையுடன், ஏகாம்பரநாதர் திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள திரிபுராந்தகேஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக செல்வார்.திம்மசமுத்திரம் கிராமவாசிகள் மற்றும் உற்சவ ஏற்பாட்டு குழு சார்பில், சுவாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். இதில், வழியெங்கும் பக்தர்கள் கோலமிடுவர்.மாலையில், பொதுமக்கள் தரிசனத்திற்கு பின், திம்மசமுத்திரம் கிராமத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு, நள்ளிரவு ஏகாம்பரநாதர் கோவிலை வந்தடைவார். நடப்பாண்டு, கொரோனா ஊரடங்கால் திம்மசமுத்திரம் பார்வேட்டை உற்சவம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், காலை, 8:30 மணிக்கு ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி அம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, பம்பை உடுக்கை, தவில், நாதஸ்வரம் இசைக்க, அதிர்வேட்டுகள் முழங்க, ஏலவார்குழலி அம்பிகையுடன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர், கோவில் முன் உள்ள, 16 கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அங்கு மஹாதீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பின், சுவாமி கோவிலுக்கு செல்லும் புறப்பாடு நடந்தது.
|