பதிவு செய்த நாள்
18
ஜன
2021
06:01
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள கோதவாடி, சிங்கையன்புதுார் மாலகோவில்களில், பக்தர்கள் உருவார பொம்மைகள் வாங்கி வைத்து நேர்த்தி கடன் செலுத்தி கிருஷ்ணரை வழிபட்டனர்.
கிணத்துக்கடவு சிங்கையன்புதுார் மாலகோவிலில், பூ பொங்கலையொட்டி, கிருஷ்ணருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை பிற்பகல் நடந்தது. இதில், சிங்கையன்புதுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து, கிருஷ்ணரை வழிபட்டனர். மேலும், மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் நோய்வாய்ப்பட்டால், அந்நோய் நீங்க வேண்டிக் கொள்கின்றனர். பின், நோய் சரியானவுடன், மனித வடிவம் மற்றும் ஆடு, மாடு வடிவத்தில் உருவார பொம்மைகளை வாங்கி கோவில் முன்புறம் வைத்து வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.மேலும், கல்லாபுரத்தில் இருந்து, பொங்கல் பண்டியை துவங்கியதில் இருந்து நான்கு நாட்களுக்கு மாடு கன்று ஈன்றால், அந்த மாடுகளை மாலகோவிலுக்கு அழைத்து வந்து கோவில் முன்புறம் நிறுத்தி வழிபட்டு திரும்ப அழைத்து சென்றனர். இக்கோவில் பூஜையினை கல்லாபுரம் பொதுமக்கள் செய்தனர்.இதேபோல், கோதவாடி ஆல்கொண்ட திருமால் கோவிலில், நேர்த்திக்கடன் செலுத்த உருவாரங்கள் வாங்கி வைத்தும், திருமாலுக்கு பால் ஊற்றியும் வழிபட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, கோவில் முன்புறம் திருவிழா போன்று கடைகள் ராட்டினங்கள் அமைக்க அனுமதியில்லை, என போலீசார் தெரிவித்து இருந்ததால், கடைகள் அமைக்கப்படவில்லை.