பதிவு செய்த நாள்
18
ஜன
2021
11:01
நீங்கள் மாடு வளர்ப்பவரா... அதற்கு அடிக்கடி நோய் வருகிறதா கவலை வேண்டாம். மதுரை மாவட்டம் கள்ளிக்குடிக்கு அருகிலுள்ள குராயூர் வேணுகோபால சுவாமிக்கு நேர்ந்து கொள்ளுங்கள்.
14ம் நுாற்றாண்டில் தென்காசியை ஆட்சி செய்த மன்னர் வென்று மாலையிட்ட வீரபாண்டியன் கட்டிய கோயில் இது. பின்னர் பராக்கிரம பாண்டியனால் கோயில் விரிவுபடுத்தப்பட்டது. பாமா, ருக்மணியுடன் புல்லாங்குழல் இசைக்கும் கிருஷ்ணர் இருக்கிறார்.
நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி (ஆதிநாதபெருமாள்) கோயிலில் நம்மாழ்வார் அமர்ந்திருந்த புளியமரம் உள்ளது. இது பூப்பதும், காய்ப்பதும் இல்லை. இங்குள்ள நந்தவன புளியமரமும் அதைப் போலவே இந்த கோயில் புளியமரமும் பூப்பதும், காய்ப்பதும் இல்லை. பொதுவாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் ஆற்றின் கரையில் உள்ள ஊர்கள் புனிதமானது. அதைப் போல இங்கு ஓடும் கமண்டல ஆறு தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ஓடுகிறது. நாலாயிரதிவ்ய பிரபந்த பாடல்களில் இடம் பெற்றுள்ள ‘குரா’ மலர்கள் அதிகம் விளைவதால் இதற்கு ‘குராயூர்’ எனப் பெயர்.
மாடுகள் நோயின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும் நெல், மிளகாய், கேழ்வரகு போன்ற விளைபொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். சனிக்கிழமை காலையில் திருமஞ்சனமும், மாலையில் சிறப்பு பூஜையும் நடக்கிறது. திருமணம், குழந்தை பாக்கியம், உடல்நலம் பெற சுவாமிக்கு துளசிமாலை சாத்துகின்றனர். கல்வியில் சிறந்து விளங்க மாவிளக்கு ஏற்றுகின்றனர்.
நுழைவு வாயில், மகா மண்டபம், ஆழ்வார்கள் மேடை, அர்த்த மண்டபம், கருவறை என ஐந்து பிரிவாக கோயில் உள்ளது. கருவறையின எதிரில் கருடாழ்வாரும், கல்துாணில் ஆஞ்சநேயரும் உள்ளனர்.
எப்படிச் செல்வது: மதுரை – விருதுநகர் ரோட்டில் 22 கி.மீ.,யில் கள்ளிக்குடி. இங்கிருந்து 1 கி.மீ.,யில் குராயூர்.
விசேஷ நாட்கள்: தமிழ் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, மாட்டுப்பொங்கல்
நேரம்: காலை 7:00 – 9:00 மணி, மாலை 5:00 – 7:00 மணி
தொடர்புக்கு: 98432 93141, 0452 – 269 3141
அருகிலுள்ள தலம்: திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோயில்(22 கி.மீ.,)
நேரம்: காலை 6:30 – 11:30 மணி, மாலை 5:00 – 9:00 மணி
தொடர்புக்கு: 0452 – 234 2782