ஆஞ்சநேயர் கோவில் செல்ல தடை: பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2021 04:01
ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த பாலாறில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி அடுத்த நா.மூ.சுங்கம் அருகே, பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் விசேஷ தினங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், பாலாறு நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. பாதுகாப்பு கருதி கோவில் பூட்டப்பட்டு, கோவில் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்த திரளான பக்தர்கள், ஏமாற்றமடைந்து திரும்பினர். நீர் வரத்து குறைந்ததும், தடையை நீக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.