தஞ்சாவூர், சுவாமிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக போற்றப்படும், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழாவையொட்டி பத்து நாட்கள் சிறப்பு வெகு விமர்சையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழாவின் துவக்கமாக இன்று காலை, மலைக்கோயிலில் கொடிமரம் முன்பாக, சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடனும், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு மங்களவாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து மலைக்கோவிலிலிருந்து உற்சவ மண்டபத்துக்கு சுப்பிரமணியசுவாமி எழுந்தருளினர். இதையடுத்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை இரு வேளையும் சுவாமி உள்பிரகார புறப்பாடு நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி இரவு பஞ்சமூர்த்திசுவாமிகள் புறப்பாடும், தைப்பூச தினமான ஜன.28-ம் தேதி காலை 10 மணியளவில் கோவில் உள்ளே உள்ள வஜ்ர தீர்த்தத்தில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு கொடிஇறக்கம் செய்யப்பட்டு, 29-ம் தேதி சுவாமி மலைக்கோவிலுக்கு திரும்ப உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.