திருப்பரங்குன்றம்:தேனி மாவட்டம் போடி அருகிலுள்ள சடையால்பட்டியில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய நில எல்லை கல்வெட்டை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ராஜகோபால் கண்டுபிடித்தார்.
அவர் கூறியதாவது: பழங்கால கல்வெட்டுக்கள் தொடர்பாக தேனி மாவட்ட கிராமங்களில் ஆய்வு நடத்தினேன். சடையால்பட்டி ஜெயக்குமார் தந்த தகவலின்படி அவரது விளைநிலத்தில் பெரிய அளவில் கல் மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் இருந்ததை மீட்டோம்.ஒன்றரை அடி அகலம், இரண்டரை அடி நீளம் இருந்த அந்த கல்வெட்டில் பழங்கால எழுத்துக்கள் இருந்தன. கல்வெட்டு மேல் விளிம்பில் இருந்த சில குறியீடுகள் இயற்கை சூழல் காரணமாக சேமடைந்திருந்தன. 5 வரிகளில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது.
அதிலுள்ள எழுத்து வடிவைக்கொண்டு பார்க்கும் போது 13ம் நுாற்றாண்டு பிற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தது எனவும், 800 ஆண்டுகள் பழமையானது எனவும் தெரிந்தது. தெற்கு திசை நோக்கி இருந்த இக்கல்வெட்டில் ஸவஸ்த்ஸ்ரீ ஸவணனர் நிலத்துக்கு தென் எல்லை என பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டிலுள்ள வாசகங்களை மதுரை தொல்லியல் துறையின் முன்னாள் நிபுணர் சாந்தலிங்கம் உதவியுடன் பொருள் கண்டறியப்பட்டது. ஸவஸ்த்ஸ்ரீ என்பது பக்திச் சொல் வடிவத்திலும், ஸவணனர் என்பது பிராமணர் மக்கள் எனவும் பொருள். அதாவது பிராமணர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்துக்கு தென் எல்லை என எழுதப்பட்டுள்ளது. அக்கால ஆட்சியாளர்கள் நில தர்மங்களை வழங்கி அது யாருக்கு வழங்கப்பட்டது என்பதையும் அதன் எல்லை உரிமைகளை சுட்டிக்காட்டி உள்ளனர் என்றார்.