பதிவு செய்த நாள்
27
ஜன
2021
12:01
அயோத்தி :அயோத்தியில், ஐந்து ஏக்கர் நிலத்தில், தேசிய கொடி ஏற்றி, மரக்கன்றுகளை நட்டு, மசூதி கட்டும் பணியை, இந்திய இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை, நேற்று
துவக்கியது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி, கடந்த, 2019 நவம்பரில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே தீர்ப்பில், மசூதி கட்டுவதற்கு, அயோத்தியில், ஐந்து ஏக்கர் நிலத்தை, சன்னி வக்பு வாரியத்திடம் வழங்க வேண்டும் என, உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, அயோத்தி அருகே, ஐந்து ஏக்கர் நிலத்தை, உ.பி., அரசு வழங்கியது. இந்த நிலத்தில் மசூதி கட்ட, சன்னி வக்பு வாரியம் சார்பில், இந்திய இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை அமைக்கப்பட்டது.இந்நிலையில், அயோத்தியில் ஐந்து ஏக்கர் நிலத்தில், மசூதி கட்டும் பணி நேற்று துவங்கியது. இந்திய இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையின் தலைவர் ஜாபர் அகமது பரூக்கி, தேசிய கொடியை ஏற்றினார்.தொடர்ந்து, அறக்கட்டளையின், 12 உறுப்பினர்களும் மரக்கன்றுகளை நட்டு, மசூதி கட்டும் பணியை துவக்கி வைத்தனர். பின், பரூக்கி கூறியதாவது: நிலத்தில் மண் பரிசோதனை நடந்து வருகிறது, பரிசோதனை முடிவுகள் வெளிவந்து, வரைபடத்துக்கு அனுமதி பெற்ற பின், கட்டுமானபணி துவங்கும். மசூதி கட்ட, மக்கள் இப்போதே நிதி அளித்து வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்த மாதம், இந்திய- இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை, புதிய மசூதிக்கான வரைபடத்தை வெளியிட்டது.மசூதி வளாகத்தில் மருத்துவமனை, நுாலகம், சமுதாய கூடம், மியூசியம் போன்றவையும் இடம் பெறும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. மசூதிக்கு, 1857ல் நடந்த முதல் இந்திய சுதந்திர போரில், உயிர் தியாகம் செய்த மவுல்வி அகமதுல்லா ஷா பெயரை வைக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.