பதிவு செய்த நாள்
28
ஜன
2021
12:01
பெங்களூரு: ஆந்திராவில் ஹிந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக, உடுப்பி மடாதிபதி விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிகளை, ஆந்திர மாநில ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் வேலம்பள்ளி சீனிவாச ராவ், நேற்று சந்தித்து ஆலோசனை பெற்றார்.ஆந்திர அரசின், ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் வேலம்பள்ளி சீனிவாச ராவ், பெங்களூரு, பசவனகுடி வித்யா பீடத்தில் உள்ள, மறைந்த உடுப்பி மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் பிருந்தாவனத்தில் தரிசனம் செய்தார்.பின், மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ஆந்திராவில், ஹிந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டது, ஹிந்துக்களுக்கு எதிரான அராஜகம் குறித்து, மடாதிபதி தனது கவலையை தெரிவித்தார்.ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின்படி, கோவில்கள் நிர்வகிப்பது குறித்து, தங்களிடம் ஆலோசனை பெற வந்துள்ளேன் என, அமைச்சர் கூறினார்.இதன்படி, மடாதிபதியும் சில ஆலோசனைகளை வழங்கினார்.ஹிந்து கோவில்கள், சிலைகள் சேதப்படுத்தப்பட்டது அரசியல் விரோதமாக இருந்தாலும் சரி; மதப் பிரச்னையாக இருந்தாலும் சரி, அதை கவனமாக நிர்வகிக்க வேண்டும். சிலைகளை சேதப்படுத்துவதால், எதிர்காலத்தில் பெரும் பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும். குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்கும் வகையில், அனைத்து கோவில்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தினால் நல்லது என மடாதிபதி ஆலோசனை வழங்கினார்.இதன் பின், பேசிய அமைச்சர், எத்தகைய ஆலோசனை அல்லது கருத்து தெரிவிப்பதாக இருந்தாலும், ஆந்திர அரசுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.சேதப்படுத்தப்பட்ட கோவில்கள், சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. கோவில்கள் சீரமைத்த பின், நீங்கள் நேரில் வந்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.ஆந்திர அரசின் உயர் அதிகாரிகள், திருமலை திருப்பதி கோவில் முக்கியஸ்தரான விஸ்வொஸ்தா உட்பட பலர் உடனிருந்தனர்.