பதிவு செய்த நாள்
28
ஜன
2021
09:01
வடலுார்: வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 150வது ஜோதி தரிசன விழாவையொட்டி 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கடலுார் மாவட்டம், வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 150வது தைப்பூச ஜோதி தரிசன விழா, இன்று நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை, 7:30 மணியளவில், தருமசாலை மற்றும் ஞானசபையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், 10:30 மணியளவில் கொடியேற்றப்பட்டது.இன்று தைப்பூச தினத்தையொட்டி, காலை, 6:00 மணிக்கு ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 10:00, மதியம், 1:00, இரவு, 7:00, 10:00 மற்றும் 29ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கும், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. இன்று, தருமசாலை பிரசங்க மேடையில், சன்மார்க்க சொற்பொழிவு, திருஅருட்பா பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில், ஊரன் அடிகளார் உள்ளிட்டோர் சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர். மாலை, 6:00 மணியளவில், மகாமந்திரம் ஓதுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கொரோனா தொற்று காரணமாக, அரசின் வழிகாட்டுதலோடு விழா நடக்கிறது.