பதிவு செய்த நாள்
29
ஜன
2021
11:01
சென்னை : சென்னை மற்றும் புறநகரில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடிய நாளில், சுவாமி முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூசம். தைப்பூச திருவிழாவையொட்டி, இந்த ஆண்டு முருகன் கோவில்களில் அதிகாலை மூலவர், உற்சவருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக, காவடி எடுப்பது மிக குறைவாக இருந்தது. தமிழக அரசு, இந்த ஆண்டு முதல், தைப்பூச விழாவிற்கு அரசு விடுமுறை அறிவித்ததால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மொட்டை போட்டும், அலகு குத்தியும் சுவாமி தரிசனம் செய்தனர்.
வடபழநி: வடபழநி முருகன் கோவிலில், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சிநடந்தது.காலை, 5:30 மணி முதல், 12:00 மணி வரை, ராஜ அலங்காரத்திலும்; மதியம், 1:00 மணி முதல், 4:00 மணி வரை சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்திலும்; மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்திலும் முருகப் பெருமான் அருள் பாலித்தார். கோவில் திருப்பணி நடப்பதால், பால்குடம், காவடி, அலகு குத்துதல் அனுமதிக்கப்படவில்லை. அரசு விடுமுறை என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர்.இதே போல, கந்தக்கோட்டம், பெசன்ட்நகர் அறுபடை வீடு முருகன், பாம்பன் சுவாமிகள், மயிலை, கபாலீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் உள்ளிட்ட இடங்களிலும், தைப்பூச விழா விமரிசையாகநடந்தது.
குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன.அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது. பல மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தி, சுவாமியை வழிபட்டனர்.கோவில் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
திருத்தணி: திருத்தணி, பெரியார் நகரிலுள்ள அருட்பிரகாச வள்ளலார் கோவிலில், நேற்று தைப்பூசத்தையொட்டி, ஜோதி தரிசனம் நடந்தது. காலை, 7:30 மணிக்கு சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டு, 8:00 மணிக்கு தீப ஆராதனையும், அகவல் பாராயணமும் நடந்தன. மதியம், 12:00 மணிக்கு, ஏழு திரை நீக்கி, ஜோதி தரிசனம் நடந்தது.அப்போது பக்தர்கள், அருட்பெரும் ஜோதி முழக்கமிட்டு, தரிசனம் செய்தனர். மதியம், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, பஜனை மற்றும் பக்தி பாடல்கள் பாடப்பட்டன.இரவு, 7:00 மணிக்கு, மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
தெப்ப உற்சவம்: தைப்பூசத்தை முன்னிட்டு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், சென்னை, பாரிமுனை கச்சாலீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜ பெருமான் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் ஆகியவற்றில், தெப்ப உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது. - நமது நிருபர் -