பதிவு செய்த நாள்
29
ஜன
2021
01:01
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, தைப்பூச திருவிழாவையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில், நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். நேற்று, தைப்பூசம் அரசு விடுமுறை அறிவித்துள்ளதால், வழக்கத்திற்கு மாறாக, 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தணி மலைக்கோவிலில் குவிந்தனர். பொதுவழியில் பக்தர்கள், நான்கு மணி நேரமும், 100 - 150 ரூபாய் சிறப்பு தரிசனத்தில், குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமும் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். எஸ்.பி., அரவிந்தன் தலைமையில், 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, திருநீலகண்டேஸ்வரர் கோவிலில், தைப்பூச விழாவை ஒட்டி, பெண்கள் பால்குடம் ஏந்தி, கோவிலை சுற்றி உள்ள சாலையில் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். இதேபோல், பஸ் நிலையம் அருகே உள்ள நாகவல்லி அம்மன் கோவிலில் உள்ள, முருகப் பெருமான் சன்னிதியில் பால்குட அபிஷேக, ஆராதனை மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டை தீனதயாளன் நகரில், அருள்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை சார்பில், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் இயங்கி வருகிறது. அங்கு, நேற்று காலை, சன்மார்க்க கொடியேற்றத்துடன் தைப்பூச விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து, திருஅருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதுதல், ஜோதி வழிபாடு நடைபெற்றது.
மேல்நல்லாத்துார்: பட்டரை கிராமத்தில் உள்ள தயவுஜோதி சன்மார்க்க சபையில், நேற்று நடந்த தைப்பூச விழாவில், காலை, 8:30 மணிக்கு சன்மார்க்க கொடியேற்றுதல் நடந்தது. பின் காலை, 9:00 மணிக்கு மகா மந்திரம் ஓதலும், காலை, 10:00 மணி முதல், 12:30 மணி வரை சொற்பொழி நடந்தது. மதியம், 12:45 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் தவிப்பு: முருகன் கோவிலுக்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், நடக்க முடியாத முதியோர்கள், முருகர் பெருமானை தரிசிக்க வந்தனர். ஆனால், கோவில் நிர்வாகம் அவர்களை சிறப்பு வழியில் அனுமதிக்காமல், இறங்கும் வழியில் செல்லுங்கள் என, திரும்பி அனுப்பினர். அங்கும் பல மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுவே, அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் சிறப்பு நுழைவு வாயிலில் அனுமதிக்கப்பட்டு, விரைவில் மூலவரை தரிசித்தனர்.