நரிக்குடி: நரிக்குடி வீரசோழனில் ஆவுடைநாயகி கைலாசநாதர் ஆலய வளாகத்தில் உள்ள வீரை கவிராஜ பண்டிதர் ஜீவசமாதியில் நடந்த 34வது ஆராதனை விழாவில், ஹோமம், அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆலடி முத்தையா ஐயர் கூறுகையில், சௌந்தரிய லஹரி, ஆனந்த லஹரியை உள்ளிட்டவைகளை தமிழாக்கம் செய்தவர் தான் வீரை கவிராஜ பண்டிதர். இவரது பிறப்பிடம் மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூர். வராகி அம்மன் மீது கொண்ட பக்தியால் குழந்தை ரூபத்தில் காட்சியளித்த அம்மன் இவருக்கு அருள் ஆசி வழங்கினார். எப்போதும் அம்மன் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக கிருதுமால் நதிக்கரையில் ஜீவ சமாதி அடைந்து அம்மனுடன் ஐக்கியமானார். அவரது நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு தை மாதம் பவுர்ணமி அன்று ஆராதனை செய்து அன்னதானம் வழங்கி வருகிறோம், என்றார்.